கடை வீதி

கண்டதில், கற்றதும், கவர்ந்ததும்...

Saturday, November 04, 2006

நர்சரி ரைம்ஸ் - (சென்னைத் தமிழில்...)

Baba black sheep....

வா வா கருப்பு ஆடு
கம்புளி நூலுக்கீதா???
கீது மச்சி கீது பாரு மூணு மூட்ட கீது
ஒன்னு நம்ம அண்ணாச்சிக்கு,
ஒன்னு நம்ம தங்காச்சிக்கு,
ஒன்னு நம்ம மச்சானுக்கு - தோ கீரான் பாரு!!!


Johny Johny.....

ஜானி ஜானி
என்ன நைனா
சக்கர துன்றியா
இல்ல நைனா.....
டபாய்கிரியா
இல்ல நைனா.....
வாய தொர
ஹா... ஹா.. ஹா...

Monday, January 30, 2006

தடங்கலுக்கு வருந்துகிறேன்

என் பணி மாற்றம் காரணமாக, இந்த மின்னூட்டத்தில் சிறு இடைவெளி இருக்கும்.

தடங்கலுக்கு வருந்துகிறேன்.

Monday, January 02, 2006

ஆபாசதீ

மருத்துவர் இராமதாசு சமீபத்தில் திரைக்கு வந்த ABCD (ஆங்கில எழுத்து) திரைப்படத்தை எப்படி அனுமதித்தார் தெரியவில்லை. சரி, ஏன் அந்த படத்திற்க்கு ABCD என்று வைத்தார்கள் என்று ஒரு சிறிய ஆய்வு செய்து பார்த்ததில், படத்தின் முன்னனி பாத்திரங்களின் (Anand, Barathi, Chandra, Diivya) முதல் எழுத்தை படத்தின் பெயராக வைத்திருக்கிறார்கள். மருத்துவர் இராமதாசு அவர்கள் நியாயப்படி இதைத் தமிழாக்கம் செய்து ஆபாசதீ (ஆனந்த், பாரதி, சந்திரா, தீவ்யா) என்று வைத்திருக்க வேண்டும்.

Thursday, December 22, 2005

இரயில் பயணங்களில்....

சமீபத்தில் பெங்கலூருலிருந்து சென்னைக்கு பகல் நேர இரயில் பயணம் செய்த போது சில விசயங்களை கவனித்தேன்.
நான் சிறுவனாயிருந்த போது, இரயில் வண்டியைப் பார்த்தால்... கையை வேகமாக அசைத்துக் கொண்டே "டா...டா.." என்று அடிவயிற்றில் இருந்து கத்துவோம். சில சிறுவர்கள் சிறு கல்லை இரயில் வண்டியை நோக்கி எறிவார்கள். இப்போதெல்லாம் சிறுவர்கள் கையையும் அசைப்பதில்லை, கல்லையும் எறிவதில்லை.

இரயில் வண்டியில் என் பார்வையில் பட்ட ஒரு ஹைக்கூத் தனமான ஒரு வரி...

"குடைக்குள் மழை...
குடை ஓட்டை".

Monday, December 12, 2005

எங்கள் பாரதி

December 11, மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த தினம்.

11-12-1882, எங்கள் கவி அவதரித்த தினம்.
கவிதையில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது. எனினும், என்னுள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற கவிஞன் பாரதி. தமிழர்களில் தலைசிறந்த மனிதன் பாரதி.
பாரதியின் அனைத்துப் பாடல்களும் எனக்கு மிகப்பிடிக்கும்... இதோ ஒரு உதாரண துளிகள்...


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!
***************************************************
அக்கினிக் குஞ்சொன்று கண்டென் -- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தென்;
வெந்து தணிந்தது காடு; -- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
***************************************************

Thursday, December 01, 2005

நீங்கள் கதாநாயகரா... வில்லரா(!) ??

எனக்கு சிறு வதிலிருந்தே ஒரு சந்ததேகம்.... (ஹி! ஹி! ஹி... திரைப் பட சந்தேகம் தான்...)

கடை வீதியில் (market), வில்லன் வயதான ஏழை வியாபாரியிடம் மாமூல் வசூலித்துக் கொண்டிருப்பார். வ.ஏ.வியாபாரி தன்னிடம் பணம் இல்லையென்றோ அல்லது தன் மகள் கல்வி/திருமணச் செலவுக்குப் பணம் தேவை என்றோ சொல்லுவார். வில்லன் தன் அக்மார்க் (AGMARK) சிரிப்பை சிரித்துவிட்டு வ.ஏ.வியாபாரியின் தள்ளு வண்டிக் கடையை அடித்து நொறுக்க எத்தனிக்கும் நேரம்... கதாநாயகன் திடீரென்று திரையில் தோன்றி வில்லன் மற்றும் வில்லன் ஆட்களை தடுத்து... ஒரு குத்து வசனம் (punch dialogue!!!) பேசிய பிறகு சண்டையை ஆரம்பிப்பார். சண்டையின் போக்கில், வில்லன் மற்றும் வில்லன் ஆட்களை வ.ஏ.வியாபாரியின் கடை மற்றும் பக்கத்து ஏழைகளின் கடைகளில் குறி தவறாமல் தள்ளிவிட்டு கடைச் சாமான்களை நொருக்கி விடுவார்.

என் சந்தேகமெல்லாம் இதில் யார் வில்லன்? யார் கதாநாயகன்??. வில்லனாவது ஒரு கடையோடு நிறுத்தி இருப்பார். ஆனால், நம் கதாநாயகன்???

இப்போதெல்லாம் கடை வீதியில், டீக்கடை, மண்பாண்டக் கடை, கலர்ப்பொடி கடை, பிளாஷ்டிக் (plastic) பாத்திரக் கடை மற்றும் காய்கறிக் கடை போன்றவற்றைப் பார்த்தால்.. நான் நினைப்பது எல்லாம்....

"கடவுளே! கதாநாயகன் இந்தக் தெருவுக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்..."

தட்ப வெட்ப சந்தேகம்

ஒவ்வொரு வருடமும் தட்பவெட்ப நிலை மாறும்போது தவறாமல் நான் கேட்கும் அங்கலாய்ப்பு...

சித்திரையில்...

"அப்பப்பா!!! என்ன வெயிலு! என்ன வெயிலு!! போன வருடம் இந்த மாதிரி இல்லை. வெக்கை குறைவாத்தான் இருந்தது"



மார்கழியில்...

"இப்ப பரவாயில்லை... போன வருடம் பார்க்க வேண்டுமே.. காலையில் பஜனைக்கு எழுந்திருக்கவே முடியாது.. அப்பிடி ஒரு குளிர்."



சரி, சரி.. வெப்பம் சென்ற வருடம், இந்த வருடத்தைவிட குறைவாக இருந்திருக்கிறது. அப்பொழுது, கெம்ப கவுடா காலத்தில் இந்த பெங்களூர்..., சுவிட்சர்லாந்து மாதிரி இருந்திருக்கும். ராஜ ராஜ சோழன் காலத்தில் தஞ்சாவூர்..., காஷ்மீர் மாதிரி இருந்திருக்கும்.

Thursday, November 17, 2005

இந்தியத் திரைப் படங்களில் வரும் மிகச் சிறந்த 10 வசனங்கள்

10. நீ 7 மணிக்கு பீச்சுக்கு போ. அங்க பீட்டர் டையமண்டோட இருப்பான். இந்த கமர்கட்டை அவன்ட குடுத்திட்டு டையமண்டை வாங்கிக்கோ. ஹோட்டல் மெரினா போய் சரக்கை ரீட்டாகிட்ட சேத்துரு. ஜாக்கிரதை... போலீஷ்... பாதி இப்போ... வேலை முடிஞ்ச பிறகு மீதி...

9. ஐயோ முதலாளி! திடீர்னு கேட்டா, அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்? எனக்கு கல்யாண வயசுல ரெண்டு பொண்னுங்க இருக்காங்க...

8. வேலைக் காரா நாய்ங்களா... என்னை பகைச்சிக்கிட்டா உங்களை எல்லாம் குடும்பத்தோட அழிச்சிருவேன்.

7. இவ்வளவு நாள் உன்னை பெத்து, வளத்து, ஆளாக்கினதுக்கு... இது தான் நீ செய்யிற கைம்மாறா??? .... என் வீட்டை விட்டு வெளியே போ... என்னை பொருத்த வரை நீ செத்துட்ட....

6. கடவுளே, எனக்குன்னு இதுவரை எதையும் நான் கேட்டதில்லை... இப்போ முதல் முறையா...

5. அம்மா, நான் BA first classல பாஸ் பண்ணிட்டேன்மா... -- உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு மகனே! இப்போ மட்டும் உங்க அப்பா உயிரோட இருந்தா எவ்வளவு சந்தோசப் படுவார் தெரியுமா?

4. சங்கர்... உங்க அம்மா எங்க கஷ்டடியில் இருக்காங்க... ஒழுங்கா அந்த டையமண்ட் எங்க இருக்குன்னு சொல்லிரு...

3. விஜய்.. இந்த இடத்த போலீஷ் சுத்தி வளைச்சாச்சு.. தப்பிக்க நினைக்காத...

2. இங்க நீ எவ்வளவு கத்துனாலும் யாருக்கும் கேக்காது... இப்போ உன்னை அந்த கடவுளே நினச்சாலும் காப்பாத்த முடியாது.

1. ராஜா.... உங்க வாரிசு இப்போ என் வயித்தில வளர்ந்த்துகிட்டு இருக்கு.

துன்புறுத்தப் படாத விலங்கு

சென்ற வாரம், தொலைக்காட்சி மெகா தொடரைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. தொடரின் தயாரிப்பாளருக்கு தொடரின் நடிக நடிகையர் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.
தொடர் ஆரம்பத்தில் "இத்தொடரில் நடிக்கும் விலங்குகள் அனைத்தும் துன்புறுத்தப் படவில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று காண்பிக்கிறார்கள்.

முத்தான வசனங்கள்

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் குழந்தைகள் தினச் சிறப்பு திரைப் படமாக காண்பிக்கப் பட்ட படத்தில் வந்த வசனம் ஒன்று என்னைக் கவர்ந்தது.

பணக்கார நாயகி தன் தந்தையிடம் சொல்லுகிறார்: "ஒரு ரிக்சாக் காரன் மனைவி ஆகிறதில் நான் ரொம்ப பெறுமைப் படுறேன்"
ஆஹா! எவ்வளவு எதார்த்தமான வசனம்!!!

ம்ஹ்ம்... எப்பொழுது நம் ஊர்ப் பெண்கள் "ஒரு கம்ப்யூட்டர் காரன் மனைவி ஆகிறதில் நான் ரொம்ப பெறுமைப் படுறேன்" என்று சொல்லப் போகிறார்களோ???



தமிழ் சினிமாவில் இது போன்று நிறைய வசனங்களைக் கேட்கலாம். அவற்றில் என்னைக் கவர்ந்த சில...

காதலர் தினம் - நாயகன் நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியில்...

நாயகன் : "ஐ லவ் யூ ரோசா"

நாயகி : "ஐ லவ் யூ ராசா"

உலகம் சுற்றும் வாலிபன் - விஞ்ஞானி முருகன் (MGR), பேரழிவை ஏற்படுத்தும் ஆயூதம் ஒன்றை, உலக மக்களின் நன்மைக்காக கண்டுபிடிக்கும் நேரம் சொல்லுகின்ற...

"சக்ஸஸ்... சக்ஸஸ்!!!"